“பாஜக செயல்களில் ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை” - மூவர்ணக் கொடி பேரணிக்குப் பின் கார்கே கருத்து

எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் மூவர்ணக்கொடி பேரணி
எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் மூவர்ணக்கொடி பேரணி
Updated on
1 min read

புதுடெல்லி: பாஜகவின் செயல்களில் ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று, எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் சார்பில் டெல்லியில் மூவர்ணக் கொடி பேரணி நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி, விஜய் சவுக் வரை சென்றது. மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர் மல்லிகார்ஜுன் கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''ஜனநாயகம் குறித்து நரேந்திர மோடி அரசு நிறைய பேசுகிறது. ஆனால், அவர்களின் செயல்களில் அது பிரதிபலிப்பதில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார். அதன் பிறகும் அவர் தனது லண்டன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. அவர்களின் செயல், எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதாக உள்ளது.

பழைய ரயிலில் புதிய இன்ஜினை மாற்றிவிட்டு அதற்கு விழா எடுக்கிறார்கள். அதில், பிரதமர் மோடி பங்கேற்று மிக நீண்ட உரையை நிகழ்த்துகிறார். ரயில் தொடக்க விழாவுக்கு பிரதமர் செல்ல வேண்டுமா? அவர் என்ன அந்த தொகுதியின் எம்.பி.யா?'' என கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அளித்த பேட்டியில், ''நாடாளுமன்றத்தை அரசே நடத்த விடாமல் செய்கிறது. அவர்கள் ஏன் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுக்கிறார்கள்?'' என கேள்வி எழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in