“பாகிஸ்தானில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை; பிரிவினை தவறென நினைக்கிறார்கள்” - ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
Updated on
1 min read

போபால்: சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் பாகிஸ்தானில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றும், இந்தியப் பிரிவினை தவறு என தற்போது அவர்கள் நம்புகிறார்கள் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

புரட்சியாளரும், சுதந்திர போராட்ட வீரருமான ஹேமு கலாணியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டார். இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய மோகன் பாகவத் கூறியதாவது: "அகண்ட பாரதம் என்பது உண்மை, பிளவுபட்டிருக்கும் பாரதம் ஒரு கொடுமையான கனவு. கடந்த 1947க்கு முன்பு ஒரு பாரதம் இருந்தது. தங்களின் பிடிவாதத்தால் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அங்கு இப்போதும் வலிகள் இருக்கின்றன.

அதற்காக பாகிஸ்தான் மீது பாரதம் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. மற்றவர்கள் மீது வலிந்து தாக்கும் கலாச்சாரத்திற்கு நாம் எதிரானவர்கள். தற்காப்புக்காக மட்டும் தாக்குதல் நடத்துவதே நம்முடைய கலாச்சாரம். இதற்கு முன்பும் அப்படிச் செய்திருக்கிறோம். இனிமேலும் செய்வோம். இந்தியாவில் இருந்து பிரிந்தது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் கூறுகிறார்கள். அனைவரும் அதைத் தவறு என்று கூறுகிறார்கள். எது சரியோ அது நிலையாக இருக்கும். தவறானவைகள் வந்து வந்து போகும்.

உங்களின் செழுமையான சிந்திக் கலாச்சாரம் மற்றும் விழுமியங்களுக்காக பிரிவினையின் போது அந்த பாரதத்தில் இருந்து இந்த பாரதத்திற்கு வந்த உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன்". இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in