ராஜஸ்தானில் 4 சகோதரர்கள் இணைந்து சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி வரதட்சணை: 100-க்கணக்கான வண்டிகளில் சீதனப் பொருட்கள் ஊர்வலம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: இந்தியாவில் வரதட்சணை தடுப்பு சட்டம் 1961-ன்படி திருமணத்துக்கு வரதட்சணை வழங்குவது சட்டவிரோதம். வரதட்சணை கேட்பதும் குற்றம். இந்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். எனினும் நாடு முழுவதும் வரதட்சணை பழக்கம் தொடர்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள திங்சாரா கிராமத்தில் அர்ஜூன் ராம், பகிரத், உமைத் ஜி மற்றும் பிரகலாத் மெஹாரியா ஆகிய 4 சகோதரர்கள் உள்ளனர். இவர்களது சகோதரி பன்வாரி தேவியின் திருமணம் கடந்த 26-ம் தேதி நடந்தது. அப்போது சகோதரர்கள் 4 பேரும் இணைந்து ரூ.8 கோடியே 31 லட்சம் மதிப்பில் வரதட்சணை வழங்கினர். இந்த கிராமத்தில் இந்த அளவுக்கு அதிகத் தொகை வரதட்சணையாக இது வரை வழங்கப்பட்டதில்லை.

இந்த வரதட்சணையில் ரொக்கம் ரூ.2.21 கோடி, ரூ.4 கோடி மதிப்பில் 33 ஏக்கர் நிலம், ரூ.71 லட்சம் மதிப்பில் 1 கிலோவுக்கு மேல் தங்க நகைககள், ரூ.9.8 லட்சம் மதிப்பில் 14 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.7 லட்சம் மதிப்பில் ஒரு டிராக்டர், ஸ்கூட்டர் மற்றும் இதர பொருட்களும் அடங்கியுள்ளன. சீதன பொருட்கள் அனைத்தும், திங்சாரா கிராமத்தில் இருந்து மாப்பிள்ளை வீடு இருக்கும் ரய்தானு கிராமத்துக்கு 100-க்கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் ஒட்டக வண்டிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதைப் பார்ப்பதற்கு கிராம மக்கள் திருமணம் நடைபெறும் இடத்தில் கூடினர்.

இதற்கு முன்பு புத்ரி கிராமத்தைச் சேர்ந்த பன்வார்லால் சவுத்ரி என்பவர், தனது சகோதரி திருமணத்துக்கு ரூ.3 கோடியே 21 லட்சம் வரதட்சணை வழங்கியதுதான் சாதனையாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in