ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு பேரன் பிறந்த நாளில் அன்னதானம்

ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு பேரன் பிறந்த நாளில் அன்னதானம்
Updated on
1 min read

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவரது மனைவி பிராம்மனி. இவர்களுக்கு தேவான்ஷ் (8) என்கிற மகன் உள்ளார். இவர் பிறந்ததில் இருந்தே இவரது பெயரில் வருமான வரி செலுத்தப்பட்டு வருகிறது.

தேவான்ஷின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் திருமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து, அன்றைய அன்னதானத்திற்கான முழுத் தொகையை நன்கொடையாக வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் தேவான்ஷின் 8-வது பிறந்த நாளையொட்டி அவரது தாயார் பிராம்மனி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 33 லட்சம் நன்கொடையாக வழங்கினார். பக்தர்களுக்கு ஒருநாள் அன்னதானத்திற்காக இத்தொகையை அவர் காசோலையாக அனுப்பி வைத்தார். இதனால் திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் நேற்று அவரது பெயரில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு பலகை தேவஸ்தானம் சார்பில் வைக்கப்பட்டிருந்தது.

பாத யாத்திரை: லோகேஷ் தற்போது ஆந்திரா முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருவதால் அவரால் இம்முறை குடும்பத்துடன் திருமலைக்கு வர இயலவில்லை என தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in