

புதுடெல்லி: நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் சூழலில், வெப்ப அலையால் ஏற்படும் நோய்கள் குறித்து கண்காணிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை கடிதம் எழுதியுள்ளது.
மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷண் இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், யூனியன் பிரதேச செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மார்ச் 1-ஆம் தொடங்கி அன்றாடம் வெயில் சம்பந்தமான நோய்களைக் கண்காணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசுகள் சுகாதாரத் துறை மற்றும் சுகாதார ஊழியர்கள் தயாராக இருப்பதை உறுதி செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அத்தியாவசிய மருந்துகள், ஐஸ் பேக், தேவையான மருந்து கருவிகளை வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், கடந்த 2021-ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக இருந்திருக்கிறது. கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2021-ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக இருந்துள்ளது. இதற்கு முன்னதாக 2009, 2010, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகள் இந்தியாவில் அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளாக இருந்துள்ளன. இந்நிலையில், நாளை மார்ச் 1 முதலே வெயில் தாக்கத்தினால் ஏற்படும் நோய்களை கண்காணிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.