Published : 22 Jan 2023 02:01 PM
Last Updated : 22 Jan 2023 02:01 PM

''பிரதமராவதற்கு தகுதியானவர் ராகுல் காந்தி'': சிவ சேனா எம்.பி. சஞ்சய் ராவத்

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சஞ்சய் ராவத்

ஜம்மு: நாட்டின் பிரதமராவதற்கு ராகுல் காந்தி தகுதியானவர் என்று சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரையில் கலந்து கொண்ட சஞ்சய் ராவத், ஹாட்லி மோர் என்ற பகுதியில் இருந்து சந்த்வால் என்ற பகுதி வரை சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தியோடு நடந்து சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கொள்கை, அரசியல் கருத்து வேறுபாடுகள் என அனைத்தையும் தாண்டி ராகுல் காந்தி தனது தலைமைப் பண்பை வெளிப்படுத்தி உள்ளார். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது அவர் நிச்சயம் ஆளும் பாஜகவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்குவார். நிச்சயம் ராகுல் காந்தி அதிசயங்களை நிகழ்த்துவார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள 3,500 கிலோ மீட்டர் தொலைவை எல்லோராலும் நடந்து கடந்துவிட முடியாது. தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின் மூலம் ராகுல் காந்தி தனது உறுதியை, நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த யாத்திரையில், நாட்டின் மீது தனக்கு இருக்கும் அக்கறையை அவர் வெளிப்படுத்தி வருகிறார். இதில் அரசியல் இருப்பதாக நான் பார்க்கவில்லை. நாட்டின் பிரதமராக வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இல்லை என்று ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். எனினும், ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க மக்கள் முடிவெடுத்துவிட்டால் அவரால் அதை தட்ட முடியாது.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு 3வது அணி அமைக்கப்படுமானால் அது வெற்றி பெறாது. நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் தனது இருப்பை கொண்டிருக்கும் கட்சி காங்கிரஸ். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகக் குறைவான எம்.பிக்கள் கிடைத்திருக்கலாம். ஆனால், 2024 தேர்தலில் நிலைமை மாறும்.'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x