ம.பி.யில் கடத்தப்பட்டவர்களை மீட்க நிதி திரட்டும் கிராம மக்கள்

ம.பி.யில் கடத்தப்பட்டவர்களை மீட்க நிதி திரட்டும் கிராம மக்கள்
Updated on
1 min read

போபால்: மத்திய பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராம் ஸ்வரூப் யாதவ், பட்டு பாகேல் மற்றும் குடா பாகேல். இந்த மூன்று பேரையும் நான்கு நாட்களாக காணவில்லை.

இந்த நிலையில், அவர்கள் மூவரும் அண்டை மாநிலமான ராஜஸ்தானில் இருந்து செயல்படும் கிரிமினல் கும்பலால் கடத்தப்பட்டது கிராம மக்களுக்கு அண்மையில் தெரியவந்தது. ரூ.15 லட்சம் பணம் கொடுத்தால்தான் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்களை மீட்கும் நடவடிக்கையாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணம் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கடத்தப்பட்டவர் களின் கிராமத்தைச் சேர்ந்த ராம்ஜி பாகேல் கூறியது: எங்கள் கிராமம் ஏழ்மையான குடும்பங்களைக் கொண்டது. அவர்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடு வளர்ப்பவர்கள். கடத்தப்பட்டவர்கள் கூட ஏழை விவசாயிகள்தான். அவர்களது வீட்டுக்கு சரியான கூரைகூட இல்லை. இதுபோன்ற சூழ்நிலை யில், அவர்களின் விடுதலைக்காக ரூ.15 லட்சத்தை எப்படி கொடுக்கப் போகிறோம் என்று தெரிய வில்லை. இருப்பினும், எங்களால் முடிந்த வரை பணத்தை திரட்டி கடத்தப்பட்டவர்களை பத்திரமாக மீட்போம் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஷியோபூர் எஸ்பி அலோக் குமார் சிங் கூறுகையில், “ கடத்தல்காரர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கான சன்மானத் தொகை ரூ.10,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்டவர்களை மீட்க ராஜஸ்தான் போலீஸாருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்" என்றார்.

ராஜஸ்தானிலிருந்து செயல்படும் கடத்தல் கும்பல் ம.பியின் குவாலியர்-சம்பல் எல்லையோர மாவட்டங்களை குறிவைத்து இதுபோன்ற சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பாக கடத்தப்பட்ட விவசாயி பிணையத் தொகையைசெலுத்திய பின்பே விடுவிக்கப்பட்டார். கடத்தல் கும்பலின் தலைவன் தலைக்கு ரூ.1.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டும் அவர் இன்னும் பிடிபடாமல் இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in