

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்தி உள்ளார்
இதுகுறித்து நரசிம்ம மூர்த்தி ‘தி இந்து' விடம் கூறியதாவது:
கடந்த செப்டம்பர் மாதம் வரை நலமுடன் இருந்த ஜெயலலிதா திடீரென இரவில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண காய்ச்சல், நீர்ச்சத்து குறை பாடு, ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என முதலில் சொன் னார்கள். அடுத்த சில தினங்களில் வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தார் கள். அவரது உடலுக்கு என்ன பிரச்சினை என வெளிப்படையாக அறிவிக்காததால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எனவே, ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்த தகவல்களை தெரிவிக்கக் கோரி, கடந்த அக்டோபர் 1-ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பினேன். ஆனால் தமிழக அரசு உரிய பதில் அளிக்காமல் எனது கோரிக்கையை திருப்பி அனுப்பியது.
எனவே மீண்டும் முதல்வரின் தனிச் செயலர், தலைமைச் செயலர் ஆகியோருக்கு இதுகுறித்து கடிதம் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. இதனால் எனது சந்தேகம் வலுத்தது. அதற்கு வலு சேர்க்கும் விதமாகவே, மருத்துவமனைக்கு வந்த ஆளுநர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் யாரையும் ஜெயலலிதாவை சந்திக்க விடவில்லை என செய்திகள் வந்தன.
இந்நிலையில் கடந்த 4-ம் தேதி இரவு திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்தது. 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த, அதுவும் உடல்நிலை முற்றிலும் தேறிய ஒருவருக்கு எப்படி திடீரென மாரடைப்பு வரும்? என சந்தேகம் எழுந்தது. அடுத்த ஓரிரு நாட்களில் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அறிவித்து விடுவார்கள் என சந்தேகித்தேன்.
அதன்பேரில் ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே, அதாவது கடந்த 5-ம் தேதி காலை 10 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை செயலர், முதல்வரின் தனி செயலர் ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் “ஜெயலலிதா இறந்தால் கட்டாயம் அவரது உடலை பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்'' என கூறியிருந்தேன்.
எனது கடிதத்தை பரிசீலிக்காமல் ஜெயலலிதா உடலை அவசர அவசரமாக மறுநாள் மாலையே அடக்கம் செய்துள்ளனர். ஜெய லலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோடானு கோடி மக்கள் வெளியூர்களில் இருந்து வந்துகொண்டிருந்த நிலையில் உடனடியாக அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி. இவர் கடந்த 36 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் பல்வேறு பொதுநல வழக்குகளை தொடுத்துள்ளார். கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் ஆடம்பர திருமணம் குறித்து இவர் புகார் அளித்த பிறகே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.