

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக விமானப் படை முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகி உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது விவிஐபிக்கள் பயணிப்பதற்காக இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்க உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. ரூ.3,600 கோடி மதிப்புள்ள இந்த உடன்பாட்டை இறுதி செய்வதற்காக அப்போது விமானப்படை தளபதியாக இருந்த எஸ்.பி.தியாகி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2014, ஜனவரி 1-ல் இந்த உடன்பாடு ரத்து செய்யப்பட்டது.
மேலும் ஊழல் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி இடைதரகர் கள் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் என்கிற ஜூலி தியாகி மற்றும் வழக்கறிஞர் கவுதம் கைத்தானை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். ‘‘ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி ஒருவர் கைது செய்யப்படு வது இதுவே முதல் முறை” என சிபிஐ தெரிவித்தது.