

பாட்னா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவு பெற்ற ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில் லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தந்தைக்கு, அவரது மகள் ரோஹினி ஆச்சார்யா சிறுநீரகத்தைத் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இத்தகவலை அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தனது தந்தையும், மூத்த சகோதரி ரோஹினியும் தற்போது நலமாக இருப்பதாக தேஜஸ்வி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தைக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி மற்றும் நல்வாழ்த்துகள் என்றும் தேஜஸ்வி யாதவ் அதில் குறிப்பிட்டுள்ளார்.