சொத்து, வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
Updated on
1 min read

சென்னை: ரூ.206.42 கோடி வரி பாக்கிக்காக தனது 117 ஏக்கர் நிலம் மற்றும் 4 வங்கி கணக்குகளை முடக்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில், வருமானவரித் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வந்த புகாரையடுத்து வருமானவரித் துறையினர், அப்போது அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்தினர்.

ரூ.206.42 கோடி வரி பாக்கி

இதில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கடந்த 2011-12 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில் ரூ.206.42 கோடி வருமானவரி பாக்கியுள்ளதாகக் கூறி விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள அவரது 117 ஏக்கர் நிலங்கள் மற்றும் 4 வங்கி கணக்குகளை வருமானவரித் துறை முடக்கியது.

இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தனது முடக்கப்பட்ட வங்கி கணக்குகளில், எம்எல்ஏ-வுக்கான தனது சம்பளம் மற்றும் மற்ற அரசு சார்புடைய நிதிகளும் வரவு வைக்கப்படுகிறது. அந்த வங்கி கணக்குகளை வருமானவரித் துறை முடக்கி வைத்துள்ளதால் தன்னால் தொகுதிக்கு ஆற்ற வேண்டிய பணிகளை செய்ய முடியவில்லை.

விசாரணை டிச.1-க்கு தள்ளிவைப்பு

எனவே முடக்கி வைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளை விடுவிக்க வருமானவரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இதுதொடர்பாக வருமானவரித் துறை பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை டிச.1-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in