Published : 23 Nov 2022 06:01 AM
Last Updated : 23 Nov 2022 06:01 AM

சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ பெயரில் மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்

புதுடெல்லி: சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிக்க ‘வியத்தகு இந்தியா’ என்ற சர்வதேச சுற்றுலா பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுலாத் துறை செயலர் அர்விந்த் சிங் இதுகுறித்து கூறியதாவது: இந்திய சுற்றுலாத் துறையை மேம்படுத்த ‘வியத்தகு இந்தியா' என்ற முழக்கத்துடன் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டில் உருவான கரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய சுற்றுலாத் துறை முழுவதுமாக முடங்கிப் போனது. ஆனால், கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, ‘வியத்தகு இந்தியா’ என்ற பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். மேலும், இது, கரோனாவுக்கு முன்பு காணப்பட்ட விறுவிறுப்பைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 காலகட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை1.7 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில்,வரும் 2023-ல் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதால் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை கரோனாவுக்கு முந்தைய நிலையை விஞ்சும் என்ற நம்பிக்கை உள்ளது.

மேலும் இது, அவர்களுக்கு கலாச்சார, ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் புத்தணர்வு தரும் நிகழ்வாக அமையும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் ஜி20 அமைப்பின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அமிதாப் காந்த் முக்கிய பங்காற்றுவார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x