காஷ்மீர் | எல்லையில் ஊடுருவல் முயற்சி: ஒருவர் சுட்டுக்கொலை; மற்றொருவர் கைது

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் அருகே தனித்தனியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பாகிஸ்தானியர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று எல்லைப் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஜம்முவில் உள்ள அர்னியா பகுதியிலும், ராம்கர் மாவட்டத்தில் உள்ள சம்பா பகுதியிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றதை எல்லை பாதுகாப்பு வீரர்கள் கண்டறிந்தனர்.

இதில் ஜம்முவின் அர்னியா பகுதி வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் மிகவும் ஆக்ரோஷமாக எல்லையில் இருக்கும் பென்சிங் வேலியை நோக்கி வந்தார். அவரை அங்கேயே நிற்குமாறு எல்லை பாதுகாப்பு வீரர்கள் எச்சரிக்கை செய்தனர். அவர் எதையும் பொருட்படுத்தாத நிலையில், ஊடுரு முயற்சித்த நபரை தடுத்து நிறுத்தும் பொருட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த நபர் உயிரிழந்தார்.

ராம்கர் பகுதியில் நடந்த மற்றொரு ஊடுருவல் முயற்சியில் சர்வதேச எல்லையைக் கடந்து பென்சிங் வேலியை நோக்கி வந்தவரை பிஎஸ்எஃப் வீரர்கள் கைது செய்தனர். அவர் பென்சிங் வேலியின் கதவுகள் திறப்பட்டதும் இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டார். ஊடுருவல் முயற்சி நடந்த இரண்டு பகுதிகளிலும் முழுமையாக சோதனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in