

கோப்புப்படம்
புதுடெல்லி: போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மிசோரம் - மியான்மர் எல்லைப் பகுதியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த சிலரை மிசோரம் போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 5 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மிசோரம் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “மிசோரமை சேர்ந்த சில நிறுவனங்கள், குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த சில மருந்து நிறுவனங்களிடம் இருந்து மெத்தபெட்டமைன் போதைப் பொருளை தயாரிப்பதற்கான ரசாயன மூலப் பொருட்களை வாங்கி உள்ளன. அவை மிசோரம் வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மிசோரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 9 பேரை கைது செய்துள்ளோம்” என்றனர்.
ரூ.53 கோடி முடக்கம்: இதனிடையே மிசோரம் போலீஸார் அளித்த தகவலின்படி மிசோரம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: மெத்தபெட்டமைன் தயாரிப்பதற்கு தேவையான ரசாயன மூலப் பொருட்கள் குஜராத்தில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை வாங்க மிசோரம், அசாம், நாகாலாந்து, மேற்குவங்கம், திரிபுரா, டெல்லியை சேர்ந்த 21 வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.53 கோடி முடக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் மிசோரம், குஜராத், மேற்குவங்க நிறுவனங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குறிப்பாக கொல்கத்தாவை சேர்ந்த போலி நிறுவனங்கள் பெயரில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.