

ஹைதராபாத்: தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதரமில்லை எனக் கூறி அவர்களை நீதிமன்றம் விடுவித்தது.
தெலங்கானாவில் ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு, டிஆர்எஸ் கட்சியின் தாண்டூரு தொகுதி எம்எல்ஏ பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த தகவலின் பேரில் அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில், மொயினாபாத் போலீஸார் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த 3 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து ராஜேந்திர நகர் காவல் உதவி ஆணையர் ஸ்ரீ நிவாஸ் கூறும்போது, “ஆளுங்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க இவர்கள் பேரம் பேசினர். பாஜகவில் இணையும் டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் நால்வருக்கு தலா ரூ.100 கோடி கொடுக்க இவர்கள் முன் வந்தனர்” என்றார்.
இந்நிலையில் கைது செய் யப்பட்ட மூவரையும் ஹைதராபாத் நகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து மூவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் மர்ரிகூடாவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முனுகோடு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 3-ம் தேதி நடைபெறும் தேர்தலில் டிஆர் எஸ் தோல்வி அடைவது உறுதி. இதை அறிந்த டிஆர்எஸ்கட்சியினர், பாஜக மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்த தீர்மானித்தனர். எனவே கோடிக்கணக்கில் பேரம் பேசியதாக நாடகம் அரங்கேற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் எங்கே?வெறும் செல்போன்களை மட்டுமேபறிமுதல் செய்து விட்டு போலீஸாரும் ஆளும் கட்சியினரும் இந்தநாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்” என்றார்.
விஜயசாந்தி குற்றச்சாட்டு: பாஜக முன்னாள் எம்.பி. விஜயசாந்தி தனது சமூக வலைதளப் பதிவில், “கைது செய்யப்பட்ட அனைவரும் டிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான். போலீஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இவர்களின் கையில் உள்ளது. பறிமுதல் செய்த பணம் எங்கே என போலீஸ் தெரிவிக்க வேண்டும். அதனால்தான் நீதிமன்றத்தை பாஜக நாடி உள்ளது” என்று கூறியுள்ளார்.