

'என்டிடிவி இந்தியா' சேனல் மீதான ஒரு நாள் தடை குறித்த எதிர்க்கட்சிகள் காலம் கடந்து விமர்சிப்பது சர்ச்சைகளை எழுப்பப் பயன்படுத்தும் அரசியல் உத்தி எனவும், அரசின் வரைமுறைகளை தொடர்ந்து மீறியதால்தான் சேனல் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் தீவிரவாத தாக்குதல் தொடர்பான செய்திகளை ஒளிபரப்பிய போது, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ விவரங்களையும், ரகசியம் காக்கப்பட வேண்டிய முக்கிய தகவல்களையும் பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக்காட்டியதாக 'என்டிடிவி இந்தியா' சேனல் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனை உறுதி செய்த மத்திய அமைச்சர்கள் குழு, நவம்பர் 9-ம் தேதி அன்று, அந்த தொலைக்காட்சிச் சேனலில் நிகழ்ச்சிகள் எதையும் ஒளிபரப்பாமல் நிறுத்திவைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியது. இப்பரிந்துரையை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டு தொலைக் காட்சி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், அதற்குப் பல்வேறு கட்சிகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அவர்களுக்குப் பதிலளித்துள்ளார் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு.
இதுகுறித்துப் பேசிய வெங்கய்ய நாயுடு, ''இந்த சர்ச்சைகள் அனைத்தும் நவம்பர் 3 அன்று அரசு அறிவிப்பு வெளியான பிறகு ஒரு நாள் கழித்தே எழுந்திருக்கின்றன. இதிலிருந்தே, இது இல்லாத சர்ச்சையைக் கிளப்ப மற்றவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
காங்கிரஸ் அரசு 2005 முதல் 2014 வரை, ஆபாசமான காட்சிகளை ஒளிபரப்பியதற்காக தொலைக்காட்சி ஊடகங்களுக்கு 21 முறை தடை விதித்துள்ளது. தடை, ஒரு நாளிலிருந்து 2 மாதங்கள் வரை நீடித்திருக்கிறது.
ஆபாசக் காட்சிகளை ஒளிபரப்பியதாகக் கூறித் தடை விதித்ததற்கும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பி, ராணுவ வீரர்களின் வாழ்க்கையை அபாயத்துக்கு உள்ளாக்கியதற்குத் தடை விதிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நம் நாட்டு மக்கள் புத்திசாலிகளாகத்தான் இருக்கிறார்கள்.
தர்க்கரீதியான முடிவு
'என்டிடிவி இந்தியா' சேனல் மீதான ஒரு நாள் தடை, 2008-ல் மும்பையில் நடந்த 26/11 தாக்குதலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி வழங்கிய ஆலோசனைகளைப் பின்பற்றி எடுக்கப்பட்ட தர்க்கரீதியான முடிவு'' என்று கூறினார்.
தடை சம்பவம் எமர்ஜென்ஸியை ஒத்திருக்கிறதா என்ற கேள்விக்கு, ''ஏராளமான பாஜக தலைவர்கள் நெருக்கடி காலகட்டத்தில் மோசமான சம்பவங்களை எதிர்கொண்டிருக்கின்றனர். அதே நிலையை நாங்கள் மற்றவர்களுக்குத் தரவிரும்பவில்லை. குறிப்பாக ஊடகச் சுதந்திரத்துக்கு'' என்றார்.
செய்தி ஆசிரியர்கள் சங்கத்தின் விமர்சனம் குறித்துப் பதிலளித்த நாயுடு, ''தடை குறித்துப் பேச முழுதாக ஒரு நாள் எடுத்துக்கொண்ட செய்தி ஆசிரியர்கள் சங்கம், தொலைக்காட்சி நிறுவனங்கள் (வரைமுறை) சட்டம் 1995ன் 20-வது பிரிவைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதன்படி மத்திய அரசு, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைப் பேண, எந்த சேனல் அல்லது நிகழ்ச்சியை நெறிப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ உரிமை உண்டு.
எனவே அரசாங்கம் அத்தகைய நேரங்களில் செய்தி ஆசிரியர்கள் சங்கம் பரிந்துரைத்ததைப் போல நீதிமன்றத்தை அணுகத் தேவையில்லை.
மத்திய அரசு, நாட்டுக்காக என்ன நல்லது செய்தாலும் அதை விமர்சிப்பதற்கென்றே சிலர் இருப்பார்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களும் தீவிரவாத எதிர்ப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்போது அடக்கம், முதிர்ச்சி மற்றும் உணர்வுத்திறனோடு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதே வரைமுறைகளைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்.
'என்டிடிவி இந்தியா' சேனல் வரைமுறைகளை மீறிவிட்டது
அதே நேரம் எங்களின் அரசும் காங்கிரஸின் விதிமுறைகளைப் போலவே, குர்தாஸ்பூர் தீவிரவாத தாக்குதலின்போது விதிமீறல்களைக் கண்டு வரைமுறையை ஏற்படுத்தியது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் போது நாட்டின் ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், தொலைக்காட்சி ஊடகங்கள் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யும்போது, சில வரைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அரசிதழில் அறிவிக்கை செய்தோம்.
ஆனால் 'என்டிடிவி இந்தியா' சேனல் அவற்றை மீறிவிட்டது. முன்னர் சில வரம்புமீறல்களையும் இந்த ஊடகம் செய்ததாகக் கண்டறிந்தபிறகும், அவர்கள் மாறவில்லை. அதனாலே அந்த ஊடகம் தடையை எதிர்கொண்டுள்ளது'' என்றார்.
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்புகளால்தான் உயிரிழப்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.