Published : 30 Sep 2022 05:18 AM
Last Updated : 30 Sep 2022 05:18 AM

சிம் கார்டு வாங்க போலி ஆவணங்களை வழங்கினால் ஓராண்டு சிறை

புதுடெல்லி: சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க இந்திய தொலைத்தொடர்பு வரைவு மசோதா 2022-ன் விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் மூலமாக மோசடியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, சட்டவிரோதமான காரியங்களும் தொலைத்தொடர்பு சேவையை அடிப்படையாக கொண்டே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற பல்வேறு மோசடி நிகழ்வுகளிலிருந்து தொலைத்தொடர்பு பயனாளர்களை பாதுகாக்க தொலைத்தொடர்பு வரைவு மசோதாவில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், சிறை தண்டனை விதிப்பதற்கும், அபராதம் வசூலிப்பதற்கும், தொலைத்தொடர்பு இணைப்பை துண்டிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.

மத்திய தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) உருவாக்கியுள்ள இந்த புதிய மசோதா பொது தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தொலைத்தொடர்பு பயனாளரின் அடையாளத்தை உறுதி செய்ய உதவும். அத்துடன் நிறுவனங்கள் அழைப்பை பெறுவோரை அடையாளம் காணவும் இது உதவும்.

குறிப்பாக, தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்தி நடைபெறும் இணைய (சைபர்) குற்றங்களை தடுக்க இந்த மசோதாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையின் வரைவு மசோதா பிரிவு 4 -ன்கீழ் துணைப் பிரிவு 7- ல் போலியான ஆவணங்கள் அல்லது அடையாளத்தை குறிப்பிட்டால் ஓராண்டு சிறை, ரூ.50,000 அபராதம், தொலைத் தொடர்பு சேவையை துண்டித்தல் அல்லது இவற்றில் ஏதேனும் இணைந்து தண்டனையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி நடைபெறும் குற்றங்கள் "அறிந்தே செய்யக்கூடிய குற்றம்" என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், எந்தவொரு வாரண்ட் அல்லது நீதிமன்ற அனுமதியும் இல்லாமல் குற்றவாளியை காவல்துறை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x