Published : 26 Sep 2022 12:41 PM
Last Updated : 26 Sep 2022 12:41 PM

ஹவாலா விவகாரங்களுக்கு அபுதாபி உணவகத்தைப் பயன்படுத்திய பிஎஃப்ஐ - அமலாக்கத் துறை

கோப்புப்படம்

புதுடெல்லி: வளைகுடா நாடுகளில் இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் ஹவாலா நடவடிக்கை மூலமாக இந்தியாவிற்கு பணம் அனுப்ப அபுதாபியின் உணவகம் ஒன்றினை தலைமையகமாக பயன்படுத்தியுள்ளனர் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் அங்கிருந்து நிதிதிரட்டி அதனை ஹவாலா பரிமாற்றம் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த நிதி திரட்டும் செயல்களுக்கு தேஜஸ் செய்தித்தாள் முன்ணணி ஊடகமாக செயல்பட்டுள்ளது. இந்தநிதி போலி நன்கொடை ரசீதுகள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது தடுப்புக்காவலில் உள்ள பல்வேறு பிஎஃப்ஐ உறுப்பினர்கள், தங்களின் ஹவாலா பறிமாற்ற நடவடிக்கைகளுக்கு அபுதாபியில் உள்ள தர்பார் உணவகத்தை முக்கியமான மையமாக பயன்படுத்தி உள்ளனர். ஏற்கனவே பிஎஃப்ஐக்கு எதிரான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ரசாக் என்பவர் இந்த தர்பார் உணவகம் மூலமாக பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணமோசடி குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் அபுதாபியில் தர்பார் உணவகத்தை நிர்வகித்து வரும் அவரது தம்பியின் மூலமாக இந்த குற்ற நடடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அப்துல் ரசாக்கின் டாமர் இந்தியா ஸ்பைசஸ் பி லிமிட் என்ற மற்றொரு நிறுவனமும் இந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, ஷஃபீக் பயத் என்பவர் 2018 வரை கல்ஃப் தேஜஸ் என்ற தினசரியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இந்த நாளிதழ், இண்டர் மீடியா பப்ளிஷிங் லிமிட்- ஆல் பதிப்பிக்கப்பட்ட தேஜஸ் செய்தித்தாளின் ஒரு அங்கமாகும். இதன் நிர்வாகத் தலைவர்களில் ஒருவராக அப்துல் ரசாக் அப்போது இருந்தார்.

கடந்த 2007 -ம் ஆண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஷபீக் பையத் கத்தாரில் நிதி திரட்டும் பொறுப்பினை ஏற்றிருந்தார். இவருக்கு அபுதாபியில் இருந்த தொடர்பினை பயன்படுத்திக் கொண்ட அப்துல் ரசாக் தர்பார் உணவகத்தினை பணபரிவர்த்தனை மையமாக மாற்றிக் கொண்டார். ஷபீக் பையத் கடந்த வியாழக்கிழமை நடந்த சோதனையின் போது கேராளவில் கைது செய்யப்பட்டார்.

வளைகுடா நாடுகளில் நடந்த இந்த நிதி திரட்டுதல் மற்றும் ஹவாலா நடவடிக்கைகளில் முக்கியமாக பங்காற்றியவர் அஷ்ரஃப். இவர் பிஎஃப்ஐ-ன் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், எர்ணாகுளம் பிஎஃப்ஐ தலைவராகவும் இருந்தார். இவர் கடந்த 2010ம் ஆண்டு பேராசிரியர் ஜோசப்பின் கையை வெட்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். பிஎஃப்ஐ-ன் நிதி பரிமாற்றங்கள் தொடர்புடைய இவர் பிஎஃப்ஐ அமைப்பிற்கு நிதி பரிமாற்ற மையமாக விளங்கிய தர்பார் உணவத்தின் உரிமையாளராவார்.

இருந்தபோதிலும், அபுதாபியில் உள்ள தர்பார் உணவகம் மூலம் நடந்த பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு ஏதுவாக, தான் தான் அந்த உணவக்கத்தின் உரிமையாளர் என்பதனை அஷ்ரஃப் இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. மாறாக அப்துல் ரசாக்கை முன்னிறுத்தியே தர்பார் உணவகம் மூலம் அனைத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற நிகழ்வுகளிலும் ஈடுப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை நாடுமுழுவதும், 15 மாநிலங்களில் தீவிரவாதகளுடன் தொடர்பு மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு நிதி திரட்டுதல் போன்ற குற்றசாட்டுகள் தொடர்பாக பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் நாடுமுழுவதும் 100க்கும் அதிகமான பிஎஃப்ஐ தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x