Published : 22 Sep 2022 05:32 AM
Last Updated : 22 Sep 2022 05:32 AM

ரூ.22,842 கோடி வங்கி மோசடி - ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனர் ரிஷி அகர்வாலை கைது செய்தது சிபிஐ

புதுடெல்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்தின் நிறுவனர் ரிஷி குமார் கம்லேஷ் அகர்வாலை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியது:

ஐசிஐசிஐ வங்கியின் தலைமையிலான 28 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.2,468.51 கோடி அளவுக்கு இந்த நிறுவனத்துக்கு கடன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் கணக்குகளை 2012 மற்றும் 2017-ல் எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் தணிக்கை செய்தது. அப்போது, இந்நிறுவனம் வங்கிகளில் இருந்து பெற்ற கடனை கூட்டாகச் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது. வங்கியிலிருந்து பெற்றநிதியை திசை திருப்பி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, வங்கி பணத்தை முறைகேடு செய்த ரிஷி அகர்வால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் குற்றச் சதி, மோசடி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகர்வால் உள்ளிட்டோர் மோசடி செய்த பணத்தை வங்கிகள் ஏற்கெனவே வாராக் கடனாக அறிவித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x