

மத்திய அரசு விதித்த ஒருநாள் தடைக்கு எதிரான என்டிடிவி இந்தியா நிறுவன மனு மீதான விசாரணையை நடத்த டிசம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
அதாவது, மத்திய அரசே தடை குறித்து மறுபரிசீலனை செய்யவிருப்பதால் டிசம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு கூறும்போது, “தடை ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் ஊடகங்களில் வாசித்தோம்” என்றார்.
தடை உத்தரவு இருக்கும் போதுதான் திங்களன்று என்.டி.டிவி நிறுவமனம் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. ஆனால் நேற்று மாலையே தடையை நிறுத்தி வைத்ததாக அரசு தரப்பிலிருந்து கூறப்பட்டது.
அட்டர்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி நீதிபதிகளிடம் கூறும்போது, என்.டி.டிவி பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்ததாக குறிப்பிட்டார்.
இதனையடுத்து டிசம்பர் 5-ம் தேதிக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, அமைச்சர்கள் குழுவில் என்.டி.டிவி மீண்டும் ஒருமுறை தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கலாம் என்று நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், அரசே தடையை நிறுத்தி வைத்துள்ளதால் டிசம்பர் 5-ம் தேதி வரை காத்திருக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.