எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்புங்கள்: நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்

எல்லையை பாதுகாக்கும் வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து அனுப்புங்கள்: நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள்
Updated on
2 min read

‘‘நாட்டின் எல்லைகளைப் பாது காத்து வரும் நமது ராணுவ வீரர்களுக்கு, பொதுமக்கள் தீபாவளி வாழ்த்துகளை அனுப்ப வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதான்கோட் மற்றும் உரி ராணுவ முகாம்கள் மீது பாகிஸ் தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீருக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு வீரர்களுக்கு நாட்டு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எல்லையில் உள்ள நமது வீரர்களுக்கு தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை அனுப்ப நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மோடி கூறியிருப்பதாவது:

நாட்டில் உள்ள 125 கோடி மக்கள், எல்லையில் உள்ள வீரர்களுக்கு ஆதரவாக இருந்தால் அவர்களுடைய பலமும் 125 கோடி மடங்காக அதிகரிக்கும். இந்த மகிழ்ச்சியான தீபாவளி நேரத்தில் நமது வீரர்களுக்குப் பொது மக்கள் வாழ்த்து செய்தி அனுப்ப வேண்டும். அதை ‘MyGov.in’ அரசு இணையதளம் மூலம் #Sandesh2Soldiers’ என்ற தலைப்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பலாம்.

இந்த வாழ்த்துச் செய்தியை நமது வீரர்களுக்கு அனுப்பிவிட்டேன். நீங்களும் அதுபோல் செய்யலாம். அத்துடன் அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றின் மூலமும் பொதுமக்கள் தங்கள் வாழ்த்து செய்திகளை எல்லையில் உள்ள வீரர்களுக்கு அனுப்பலாம். மக்களின் உணர்வுகளை இவை இரண்டும் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் ராணுவ வீரர்களுக்குக் கொண்டு செல்லும்.

உங்கள் வாழ்த்துகள் நமது வீரர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்யும். இந்த தீபாவளி நேரத்தில் துணிச்சலான வீரர்கள் நமது நாட்டைப் பாதுகாத்து வருகிறார்கள் என்பது நினைத்துப் பார்ப்போம். ஜெய் ஹிந்த்.

இவ்வாறு பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘வீரர்களுக்குத் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள் அடங்கிய சிறப்பு வீடியோ ஒன்றையும் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட சில மணி நேரங்களில் ட்விட்டர், முகநூல்களில் அந்த வீடியோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நரேந்திர மோடி ஆப் மூலம் வீரர்களுக்குத் தங்கள் வாழ்த்து செய்திகளையோ அல்லது கையால் எழுதியோ பொதுமக்கள் அனுப்பலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை எல்லையில் உள்ள வீரர்களுடன்தான் பிரதமர் மோடி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த தொகுதி வாரணாசிக்கு மோடி இன்று பயணம்

நரேந்திர மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, 8-வது முறையாக தனது சொந்த தொகுதியான வாரணாசி மக்களை இன்று சந்திக்கிறார்.

உ.பி. மாநிலம் வாரணாசிக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான ‘உர்ஜா கங்கா’ எரிவாயு குழாய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அடுத்த 2 ஆண்டுகளில் வாரணாசி மக்களும், அடுத்த ஓராண்டில் பிஹார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநில மக்களும் சமையல் எரிவாயு இணைப்பை குழாய் மூலம் பெற இத்திட்டம் வழிவகை செய்யும்.

இதுதவிர, அலகாபாத்-வாரணாசி ரயில் தடத்தில் இருவழிப்பாதை திட்டத்துக்கும், டீசல் இன்ஜின் பணிமனை விரிவாக்கம் மற்றும் சரக்கு மையத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருவது, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in