Published : 20 Aug 2022 12:55 PM
Last Updated : 20 Aug 2022 12:55 PM

'26/11 தாக்குதல் போல் மீண்டும் நடக்கும்' - மும்பை காவல்துறைக்கு பாகிஸ்தான் எண்ணிலிருந்து எச்சரிக்கை

மீண்டும் 26/11 போன்ற தாக்குதல் நிகழ்த்தப்படும் என்று மும்பை காவல்துறைக்கு வாட்ஸ் அப்பில் வந்த எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஆயுதங்களுடன் ஒரு கப்பல் ராய்கட் பகுதியில் கரை ஒதுங்கி அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்நிலையில், இந்த வாட்ஸ் அப் எச்சரிக்கை வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராய்கட்டில் ஒதுங்கிய கப்பல்: மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியை மர்ம படகு நேற்று நெருங்கியது. அந்த படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் ராய்காட் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கடல் பகுதியை நேற்று மர்ம படகு நெருங்கியது. இந்த படகு குறித்து போலீஸாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து படகை ஆய்வு செய்தனர். அதில் இருந்த பெட்டியில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

துணை முதல்வர் விளக்கம்: இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நிருபர்களிடம் பேசிய அவர், "கரை ஒதுங்கிய படகு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹனா லோர்டோர்கன் என்ற பெண்ணுக்கு சொந்தமானது. அவரும் அவரது கணவர் ஜேம்ஸ் உட்பட 4 பேர் கடந்த ஜூன் 26-ம் தேதி மஸ்கட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு படகில் புறப்பட்டுள்ளனர்.

ஆனால் படகின் இன்ஜின் பழுதானதால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அந்த வழியாக சென்ற கொரிய போர்க் கப்பலில் இருந்த அதிகாரிகள், இருவரையும் மீட்டு ஓமன் நாட்டில் ஒப்படைத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய தம்பதியினரால் கைவிடப்பட்ட படகு மகாராஷ்டிர கடல் பகுதிக்கு வந்துள்ளது. அவர்கள் தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதங்களே தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மர்ம படகுக்கும் தீவிரவாதத்துக்கும் தொடர்பு இல்லை. மகாராஷ்டிராவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படவில்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை" என்று கூறியிருந்தார்.

வாட்ஸ் அப் எச்சரிக்கை: இந்நிலையில் தான் மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு ஒரு வாட்ஸ் அப் எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. இது குறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கேள்வி எழுப்பியுள்ளார். முதலில் ராய்காட் ஆயுதக் கப்பல், இப்போது எச்சரிக்கை தகவல். என்ன நடக்கிறது என்று கூறியுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மும்பையில் ஒரே நேரத்தில் பல இடங்களில் 10 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டவர் உள்பட 150 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தான் அதேபோன்ற தாக்குதல் என்ற எச்சரிக்கை வந்துள்ளது. இது தொடர்பாக மும்பை தீவிரவாத தடுப்புக் குழு, மும்பை காவல்துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x