Published : 15 Aug 2022 03:45 PM
Last Updated : 15 Aug 2022 03:45 PM

மோடியின் 82 நிமிட உரை, 5 உறுதிமொழிகள் - செங்கோட்டை சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்

புதுடெல்லி: நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார். டெல்லியில் பிரதமர் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றுவது இது 9-வது முறையாகும்.

பொதுவாக பிரதமர் மோடி உள்நாடு, வெளிநாடு என எங்கு உரை நிகழ்த்தினாலும் டெலி ப்ராம்ப்டர் மூலம் உரை நிகழ்த்துவது வழக்கம். டெலி ப்ராம்ப்டர் இல்லாமல் அவரால் உரை நிகழ்த்த முடியுமா என்று காங்கிரஸ் பலமுறை விமர்சனம் செய்ததும் உண்டு. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமர் நரேந்திர மோடி 82 நிமிடங்கள் சுதந்திர தின உரையை ஆற்றினார். இந்த உரையின்போது பிரதமர் மோடி டெலி ப்ராம்ப்டரை தவிர்த்து உரையாற்றினார்.

பிரதமர் உரையில் இருந்து:

5 உறுதிமொழிகளை ஏற்போம்:

1. தேசத்தை வளர்ந்த நாடாக்கும் பெரிய இலக்கோடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
2. எல்லா வகையான அடிமைத்தனத்தையும் நாம் வேரறுக்க வேண்டும்.
3. இந்திய பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.
4. ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும்.
5. குடிமக்கள் அனைவரும் தத்தம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். முதல்வர்கள், பிரதமருக்கும் இந்தக் கடமை பொருந்தும்.

விடுதலை வீரர்களை நினைவு கூர்வோம்:

* நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் இந்தியர்கள் அனைவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இது புதிய திசையில், புதிய இலக்குகளுடன் பயணப்பட வேண்டிய தருணம்.

* நம் நாட்டின் விடுதலைக்கான போராட்டம் நடந்தபோது ஒரே ஒரு நாள் கூட விடுதலைப் போராட்ட வீரர்கள் கொடுமையை அனுபவிக்காமல் இல்லை. இன்று தான் அவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை செலுத்த வேண்டிய நாள்.

* சுதந்திரப் போராட்ட வீரர்களின் தொலைநோக்குப் பார்வையை அவர்களின் இந்தியாவிற்கான கனவை நாம் இன்று நினைவுகூர வேண்டும்.

* நமது தேசியக் கொடியின் பெருமை நமது தேசத்தைத் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒளிர்கிறது.

* நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களை நாம் நினைவு கூர்வோம். அவர்களை சில காலம் தேசம் மறந்துவிட்டது. நாம் இப்போது அவர்களுக்கான உரிய மரியாதையை செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

பெண் வெறுப்பை ஒழிக்க உறுதியேற்போம்:

* பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதுதான் இந்திய வளர்ச்சிக்கான தூண்.
* நம் பேச்சிலும், செயலிலும் பெண்களின் மாண்பைக் குறைக்கும் சிறு வெளிப்பாடு கூட இருக்கக் கூடாது.
* நம் தேசத்தின் மகள்கள், தாய்மார்கள் நாட்டுக்காக பெரும் பங்களிப்பை நல்கி வருகின்றனர்.
* சட்டம், கல்வி, அறிவியல், காவல்துறை என நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் பெண் சக்தியின் பங்களிப்பு அளப்பரியது.
* பெண் வெறுப்பை துடைத்தெறிய உறுதியேற்போம். பெண்கள் முன்னேற்றத்தை உறுதி செய்தால் தேச முன்னேற்ற இலக்கை சீக்கிரமாக அடையலாம்.

ஊழல், வாரிசு அரசியலை ஒழிப்போம்:

* ஊழலும், வாரிசு அரசியலும் தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள். ஊழல் தேசத்தை அரிக்கும் கரையான். * ஊழலை ஒழிக்காமல், ஊழல்வாதிகளை தண்டிக்கும் மனநிலையை மக்கள் வளர்த்துக் கொள்ளாதவரை தேசம் அதன் முழுவேகத்தில் முன்னேற இயலாது.
* குடும்பத்தினர், உறவினர்கள், வேண்டியவர்கள் என்று காட்டப்படும் சலுகைகளும், செய்யப்படும் சிபாரிசுகளும் பெரிய தீமை.
* இது உண்மையான திறமைசாலிகளின் வாய்ப்பைப் பறித்துவிடும். தகுதியும், திறமையும் கொண்டவர்களுக்கு வாய்ப்பளித்தால் தான் நமது தேசம் வளர்ச்சி காணும்.
*வாரிசு நலன் அரசியலையும் தாண்டி பல துறைகளிலும் புகுந்துள்ளது.

கடினமாக உழைப்போம்:

*நம் கனவுகள் பெரிதாக இருக்கும்போது நாம் அதற்காக செலுத்த வேண்டிய உழைப்பும் கடினமாக, பெரிதாக இருக்கும்.
*நாம் அதற்கான உத்வேகத்தை நம் விடுதலைப் போராட்ட வீரர்களிடமிருந்து பெற வேண்டும்.
*நாம் நாட்டின் அனைத்து மக்களுக்காகவும் பாடுபட வேண்டும். மகாத்மா காந்தி சொன்னதுபோல், நாம் கடைசி மனிதனாக்காக போராட வேண்டும். அதுதான் நம் தேசத்தின் பலம்.
*உலக நாடுகள் நம் தேசத்தை இப்போது பெருமிதத்துடன், நம்பிக்கையுடன் பார்க்கின்றன.
* நாம் பிரச்சினைகளைத் தீர்க்கும் நாடாகப் பார்க்கப்படுகிறோம். இந்தியா கனவுகளை நினைவாக்கிக் கொள்ளும் களமாக அறியப்படுகிறது.
*நாம் புதிய இந்தியாவை வளர்க்க அனைவருக்குமான வளர்ச்சி என்ற காந்தியின் கனவை கொள்ள வேண்டும். அனைவரும் இணைந்து, நம்பிக்கையுடன், முயற்சியுடன் அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.

போட்டிமிகுந்த கூட்டாட்சி தேவை:

*நம் தேசம் வளர்ச்சி காண போட்டி மிகுந்த கூட்டாட்சி தேவை.
*பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி காண்பதில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி மனப்பாண்மை தேவை.
*இத்தருணத்தின் தேவை ஒருங்கிணைந்த போட்டிமிகு கூட்டாட்சி.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x