ஷஹாபுதினை உடனடியாக சிறையில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஷஹாபுதினை உடனடியாக சிறையில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கொலை வழக்கில் ஷஹாபுதீன் பெற்ற ஜாமீன் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் உடனடியாக அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

மேலும் ஷஹாபுதீன் குற்றம்சாட்டப்பட்ட ராஜீவ் ரோஷன் கொலை வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கின் சாதக பாதகங்களை ஆராய விரும்பவில்லை என்று கூறி ஷஹாபுதீனை உடனே கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீன் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் பிஹார் அரசின் அலட்சியப் போக்கை கண்டித்தனர். அதாவது 17 மாதங்கள் வழக்கை இழுத்தடித்தது ஏன் என்றும், உயர் நீதிமன்றத்தில் ஷஹாபுதின் ஜாமீன் பெறுவதை எதிர்த்து ஒரு நடவடிக்கை கூட பிஹார் அரசு எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

அதாவது, மாநில அரசு வேண்டுமென்றே வழக்கை இழுத்தடிக்கிறது என்ற ஷஹாபுதின் தரப்பு வாதத்தை ஏற்று பாட்னா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஹார் அரசைச் சாடுவதற்குக் காரணமாக அமைந்தது.

ஆனாலும் பிஹார் அரசு மற்றும் கொலையுண்ட ராஜீவ் ரோஷன் தந்தை சந்திரசேகேஸ்வர் பிரசாத் ஆகியோர் தனித்தனியே ஷஹாபுதின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனு செய்திருந்தனர், இந்த மனுக்கள் மீதான விசாரணையில்தான் உச்ச நீதிமன்றம் இன்று கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in