Published : 25 Jul 2022 10:59 AM
Last Updated : 25 Jul 2022 10:59 AM

'இந்தியாவில் ஏழைகளின் கனவு நிறைவேறும்; அதற்கு நானே சாட்சி' - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் முதல் உரை

புதுடெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார் திரவுபதி முர்மு. முதல் பழங்குடியின குடியரசுத் தலைவரான அவர் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் உரையாற்றினார்.

அவர் உரையிலிருந்து:

நான் குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ளது இந்தியாவில் ஏழைகள் கனவு காணலாம் அது நிறைவேறலாம் என்பதற்கான சான்று. என் பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆரம்பக் கல்வி பெறுவதே பெருங்கனவாக இருந்தது. இன்று நான் குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டுள்ளேன். அதுவும், இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் நான் குடியரசுத் தலைவராக தேர்வாகியுள்ளது எனக்கு பெருமித உணர்வைத் தருகிறது.

இந்தியா ஒவ்வொரு துறையில் புதிய வளர்ச்சி அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருக்கிறது. கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் யுத்தம் உலக அரங்கில் நாட்டின் பெருமையை உயர்த்தியுள்ளது.

நான் குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்டுள்ளது எனது தனிப்பட்ட சாதனை அல்ல. அது இந்த நாட்டின் ஒவ்வொரின் சாதனை. ஏழை எளிய மக்களின் கனவு நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்தும் சாதனை.

நான் நாட்டின் பெண்கள், இளைஞர்கள் நலனில் முக்கியத்துவம் செலுத்துவேன். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவேன்.

இவ்வாறு திரவுபதி முர்மு பேசினார்.

இதனைத் தொடர்ந்து திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவர் அதிகாரபூர்வ இருக்கையில் அமரச் செய்தார் ராம்நாத் கோவிந்த். தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ட்விட்டர் பக்கத்தில் புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x