Published : 18 Jul 2022 05:43 PM
Last Updated : 18 Jul 2022 05:43 PM

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: அஸ்ஸாம், ஒடிசா, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் முர்முவுக்கு வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்தே புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 776 பேர், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 4,120 எம்எல்ஏக்கள் என 4,896 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.

இந்தநிலையில் அஸ்ஸாம், மேற்குவங்கம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளர் முர்முவுக்கு வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அசாம் மாநில எம்எல்ஏ கரிமுதீன் பர்புய்யா கூறுகையில் ‘‘குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். அசாமில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்டத் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன? கட்சி மாறி வாக்களிக்கும் ஆபத்து இருக்கலாம் என்ற பயம் இருந்தது. மொத்தம் 20 எம்எல்ஏக்கள் இருக்கலாம். கட்சியின் முடிவை ஏற்று எத்தனை எம்எல்ஏக்கள் வாக்களித்தனர் என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தான் தெரியும்.’’ எனக் கூறினார்.

முர்முவின் சொந்த மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக கூறியுள்ளார். ‘‘நான் மண்ணின் மகளுக்கு வாக்களித்தேன். நான் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ஆனால் நான் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்தேன். மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று என் மனதைக் கேட்டு அதன்படி வாக்களித்தேன். இது எனது தனிப்பட்ட முடிவு" எனக் கூறினார்.

இதுபோலவே குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தெரிகிறது. அதேசமயம் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏக்கள் சிலர் யஷ்வந்த் சின்காவுக்கு வாக்களித்துள்ளதாக அம்மாநிலத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x