முகமது ஜுபைருக்கு எதிராக எவ்வித துரித நடவடிக்கையும் கூடாது: உச்ச நீதிமன்றம்

முகமது ஜுபைருக்கு எதிராக எவ்வித துரித நடவடிக்கையும் கூடாது: உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு எதிராக எவ்வித துரித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்துக் கடவுள்களை அவமதித்ததாகவும் உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் தனக்கெதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 6 வழக்குகளை ரத்து செய்யக் கோரி அவசர மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஜுபைர் தாக்கல் செய்திருந்தார்.

முகமது ஜுபைர் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வின் கீழ் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவைப் பிறப்பித்தார். மேலும், அடுத்த புதன்கிழமை ஜுபைர் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் வரை, முகமது ஜுபைருக்கு எதிராக எந்தவித துரித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று உத்தரப் பிரதேச நீதிமன்றங்கள், போலீஸாரிடம் கேட்டுக் கொண்டார்.

வழக்கு பின்னணி: முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா விமர்சித்திருந்தார். இதையடுத்து, நாடு முழுவதிலும் சமூக வலைதளங்களை டெல்லி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தனர்.

இதில், பெங்களூரூவில் இருந்து செயல்படும் ஆல்ட் நியூஸ் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் முகம்மது ஜுபைர், ட்விட்டரில் செய்த பதிவும் சிக்கியதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இதுகுறித்து ஜுபைரை டெல்லி போலீஸார் விசாரித்தனர். இதில் ஜுபைர் கூறிய பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி அவரை அவர்கள் கைது செய்தனர். விசாரணை என்ற பெயரில் அழைத்துவிட்டு ஜுபைரை கைது செய்ததற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஜூபைர் ஜாமீன் கோரியிருந்தார். இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், ஜுபைருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இருப்பினும், இந்த ஒரு வழக்கில் மட்டுமே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. அவர் மீது லக்கிம்பூர் கேரி, ஹத்ராஸ், சீதாபூர் ஆகிய ஊர்களிலும் பதிவான வழக்குகளில் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் ட்வீட் சர்ச்சை வழக்கில் ஜாமீன் கிடைக்கப்பெற்றாலும் சிறையிலேயே இருக்கும் சூழல் உள்ளது. தற்போது ஜுபைர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in