

காந்திநகர்: சிறப்பு குழந்தையை சந்தித்த பிறகு என்னுடைய தன்னம்பிக்கையின் அளவு அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற ‘டிஜிட்டல் இந்தியா வாரம் 2022’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பல்வேறு டிஜிட்டல் தளங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில், 11 வயது சிறப்புக் குழந்தை பிரதமேஷ் சின்ஹாவுடன் அவர் கலந்துரையாடினார்.
பார்வை குறைபாடு உடைய பிரதமேஷ் சின்ஹா, திங்கர்பெல் லேப்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக உள்ளார். இந்நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக தானாக கற்றுக் கொள்ள உதவும் பிரெய்லி கற்றல் சாதனத்தை ‘ஆன்னி’ என்ற பெயரில் தயாரித்துள்ளது. இந்த சாதனம் குறித்து பிரதமேஷ் சின்ஹா, பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.
பிரதமேஷ் கூறியதை உன்னிப்பாக கவனித்த பிரதமர் மோடி, “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்” என கேட்டார். இதற்கு, “நான் புனே நகரிலிருந்து வருகிறேன்” என பதில் அளித்தார். இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த பிரதமர், அந்தக் குழந்தையின் தலை மீது கை வைத்து வாழ்த்தினார்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “சிறிது நேரத்துக்கு முன்பு பிரதமேஷ் சின்ஹா என்ற குழந்தையை சந்தித்தேன். அவனுடன் உரையாடியபோது, ஒரு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இங்கு வந்திருக்கிறேன் என அறிமுகம் செய்து கொண்டான். அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்ட விதம் என்னைக் கவர்ந்தது. இதுபோன்ற சிலரை சந்திக்கும் போது, நம் நாடு முன்னேறுவதை தடுக்க முடியாது என்ற என் தன்னம்பிக்கை அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. ஊக்கம் தரும் மக்களால் நம் நாடு அதன் எதிர்கால கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளும்” என்றார்.
சின்ஹாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடிபோது எடுத்த வீடியோவை, திங்கர்பெல் நிறு வனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டது. அதில் “எங்கள் நிறுவன தயாரிப்பு பற்றி பிரதமேஷ் சின்ஹா பிரதமரிடம் விளக்கியயதை பெருமையாக கருதுகிறோம். நம் இளைய நட்சத்திரம் பிரதமேஷைப் போல, பல பார்வை திறன் குறைபாடு உடைய குழந்தைகளின் திறமையை ‘ஆன்னி’ வெளிக்கொண்டுவரும் என நம்பிகிறோம்” என கூறப்பட்டுள்ளது.