அக்னி வீரர்களின் ஓய்வு வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

அக்னி வீரர்களின் ஓய்வு வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
Updated on
1 min read

புர்த்வான்: ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைகளுக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக அக்னி பாதை என்ற திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன் கீழ் தேர்வு செய்யப்படுவோர் அக்னிவீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி புர்த்வான் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கூறியதாவது:

2024 மக்களவை தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு அக்னிபாதை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பாஜக அரசைப் போல அல்லாமல் அதிகப்படியானோருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதுதான் என் நோக்கம். முப்படையில் சேர்வோருக்கு 4 ஆண்டு மட்டும் பணியில் வைத்துக் கொள்வோம் என மத்திய அரசு கூறுகிறது. 4 ஆண்டுக்குப் பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுடைய எதிர்காலம் என்னவாகும்?

அக்னிபாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்களின் ஓய்வு வயதை 65 ஆக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in