மாணவர்கள் வற்புறுத்தலால் தேர்வு எழுதியவர் - மாபியா கும்பலால் 7 முறை சுடப்பட்ட அதிகாரி சிவில் சர்வீஸில் தேர்ச்சி

மாணவர்கள் வற்புறுத்தலால் தேர்வு எழுதியவர் - மாபியா கும்பலால் 7 முறை சுடப்பட்ட அதிகாரி சிவில் சர்வீஸில் தேர்ச்சி
Updated on
1 min read

லக்னோ: மாபியா கும்பலால் 7 முறை சுடப்பட்டும் உயிர் பிழைத்த உத்தர பிரதேச அரசு அதிகாரி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்தவர் ரிங்கு சிங் ரஹி. இவர் மாநில சிவில் சர்வீஸ் அதிகாரி தேர்வில் தேர்ச்சி பெற்று சமூக நலத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு முசாஃபர் நகரில் கல்வி உதவித்தொகை வழங்குவதில் நடந்த ரூ.83 கோடி மோசடியை வெளிக்கொண்டு வந்தார். இந்த வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த ஊழல் சம்பவத்தை வெளிக்கொண்டு வந்த ரிங்கு சிங் ரஹியை மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் 7 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 துப்பாக்கி குண்டுகள் ரிங்கு சிங் ரஹியின் முகத்தில் பாய்ந்தன. இந்த தாக்குதலில் அவரது முகம் சிதைந்து பார்வை மற்றும் செவித்திறனை இழந்தார். எனினும் மனம் தளராமல் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். மேலும் பல ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் ஆர்வலர்களுக்கு பாடம் எடுத்தும் வருகிறார். இந்நிலையில், சக மாணவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க ரிங்கு சிங் ரஹி 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 683-வது ரேங்க் பெற்று அவர் தேர்ச்சியாகியுள்ளார்.

இதுகுறித்து ரிங்கு சிங் ரஹி கூறியதாவது: எனக்கு யுபிஎஸ்சி தேர்வு எழுதும் ஆர்வம் இல்லை. எனது மாணவர்கள் என்னிடம் யுபிஎஸ்சி தேர்வை எழுதுமாறு வற்புறுத்திக்கொண்டே இருந்தனர். அவர்களின் தூண்டுதலால்தான் நான் தேர்வு எழுதினேன். இதற்கு முன் 2004-ம் ஆண்டில் நான் மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். என்னைப் பொறுத்தவரை பொது நலன் முக்கியம். சுய நலத்துக்கும் பொது நலனுக்கும் இடையே எப்போதாவது மோதல் ஏற்பட்டால் நான் பொது நலனைத் தான் தேர்ந்தெடுப்பேன். 2008 எனக்கு மோசமான ஆண்டாக இருந்தது. மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் சுட்டபோது எனது பார்வை பறிபோனது. முகம் சிதைந்தது. அப்போதும் மனம் தளராமல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவி வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். ரிங்கு சிங் ரஹிக்கு திருமணமாகி 8 வயதில் ஒரு மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in