Published : 28 Apr 2022 05:48 PM
Last Updated : 28 Apr 2022 05:48 PM

"மொழிகளால்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன" - சுதீப்புக்கு ஆதரவாக கர்நாடகா முதல்வர்

பெங்களுரூ: "மொழிகளால்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சுதீப்பின் கூற்று சரியானது" என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

திரைப்பட நிகழ்வு ஒன்றில் பேசிய கன்னட நடிகர் சுதீப், "இந்தி தேசிய மொழி கிடையாது" என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்வினையாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதில்தர இருவருக்கு ட்விட்டரில் வார்த்தை மோதலே ஏற்பட்டது. இறுதியில் நட்புக்கரம் காட்டி உரையாடலை முடிந்துக் கொண்டனர். இந்த நிலையில், நடிகர் சுதீப்பின் கருத்துக்கு கன்னட மற்றும் தென்னிந்திய பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் பொம்மையும் சுதீப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பொம்மை கூறும்போது, “நமது மாநிலங்கள் மொழிகளால் உருவாக்கப்பட்டன. பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுதீப்பின் கூற்று சரியானது, அதை அனைவரும் மதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பின்னணி: 'விக்ரம் ராணா' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிச்சா சுதீப், "இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களை தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்கிறார்கள். ஆனாலும் வெற்றி காண்பதில் அவர்கள் தோல்வி அடைகிறார்கள்" என்று பேசியிருந்தார்.

எதிர்பாராத விதமாக கிச்சா சுதீப்பின் இந்தக் கருத்துக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் எதிர்வினை ஆற்றத் தொடங்கினார். "சகோதரர் கிச்சா சுதீப், இந்தி நமது தேசிய மொழி இல்லையென்றால் நீங்கள் ஏன் உங்கள் தாய்மொழி படங்களை இங்கு டப் செய்து வெளியிடுகிறீர்கள்? இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்" என்று இந்தியில் பதிவிட்டார் அஜய் தேவ்கன். அதற்கு கிச்சா சுதீப், தனது பதிவில், "நான் பேசியதன் பொருள் தவறாக உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறன் சார். நேரில் சந்திக்கும் போது ஏன் அப்படிச் சொன்னேன் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். புண்படுத்த வேண்டும் என்றோ விவாதம் செய்ய வேண்டும் என்றோ நான் அப்படி சொல்லவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

தனது அடுத்த பதிவில், "நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்கு புரிந்தது. ஏனெனில் நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. என்னுடைய இந்தப் பதிலை ஒருவேளை நான் கன்னடத்தில் பதிவிட்டு இருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். அது உங்களால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும். நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம் சார்?" என்று பதிலடி கொடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x