டெல்லி கலவரத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை - மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவு

டெல்லி கலவரத்தில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை - மத்திய அமைச்சர் அமித் ஷா உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி ஜஹாங்கிர்புரியில் ராம நவமி அன்று நடந்த கலவரத்தில் 8 போலீஸார் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டெல்லி காவல் துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானாவுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை கலவரக்காரர்களுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை இருதரப்பிலும் சேர்ந்து 24 பேர் கைதாகி உள்ளனர். குற்றப்பிரிவு போலீஸாரின் 14 குழுக்கள் இந்த வழக்கு விசாரணையில் இறங்கியுள்ளனர். நேற்று மற்றொரு முக்கியக் குற்றவாளியான ஷேக் ஹமீதை (36) கைது செய்தபோது லேசான பதற்றம் ஏற்பட்ட பின் தற்போது அமைதி நிலவுகிறது. கைதான 24 பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுகேன் சர்கார், அவரது மகன்களான நீரஜ் மற்றும் சூரஜ், சகோதரர் சுரேஷ் சர்கார் மற்றும் தங்கையின் கணவரான சுஜீத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே சிக்கிய முகம்மது அன்ஸார் மீது ஜஹாங்கிர்புரியின் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிந்துள்ளது. இவர் தங்கியுள்ள ஜஹாங்கிர்புரிசி பிளாக்கில் பிஹார், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஊடுருவல் அதிகரிப்பு

ஜஹங்கிர்புரி கலவரத்திற்கு பின் அண்டை நாட்டினர் டெல்லியில் ஊடுருவும் பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. இப்பிரச்சினையை எழுப்பும் பாஜகவினர் கடந்த 1991 முதல் 2011 வரையில் இருந்ததை விட டெல்லியில் முஸ்லிம்கள் எண்ணிக்கை சுமார் 140% அதிகரித்துள்ளதாகப் புகார் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in