‘‘உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேசுங்கள்’’-  புதினிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதின்- பிரதமர் மோடி: கோப்புப் படம்
புதின்- பிரதமர் மோடி: கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினுடனும் பேசினார். அப்போது ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேசி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணுங்கள் என பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இதுவரை 15,900 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கார்கிவ் மற்றும் சுமியைத் தவிர, உக்ரைனின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து இந்தியர்களும் வெளியேற்றப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். சுமி நகரில் தற்போது சண்டை அதிகரித்துள்ளது. அங்குள்ள மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது சுமியில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு உக்ரைன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான நேரடி பேச்சுவார்த்தை தொடர்வதையும் பிரதமர் பாராட்டியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 35 நிமிடங்கள் நீடித்த தொலைபேசி உரையாடலில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உக்ரைன் அரசு செய்த உதவிக்கு பிரதமர் மோடி ஜெலன்ஸ்கிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இதுமட்டுமின்றி இரு தலைவர்களும் உக்ரைனில் உருவாகி வரும் நிலைமை குறித்தும் விவாதித்தனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான நேரடி பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என தமது விருப்பத்தையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
சுமார் 50 நிமிடம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. அப்போது உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக இருதலைவர்களும் பேசியதாக தெரிகிறது. குறிப்பாக சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தேவையான உதவிகளை அளிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

உக்ரைனில் உருவாகி வரும் சூழ்நிலை குறித்து அவர்கள் விவாதித்தனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையின் நிலை குறித்து பிரதமர் மோடியிடம் அதிபர் புதின் விளக்கினார். அப்போது ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேசுமாறு பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in