பாடகர் லதா மங்கேஷ்கருக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி

பாடகர் லதா மங்கேஷ்கருக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: மறைந்த பாடகர் லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மும்பைக்கு செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

இன்று காலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், லதா திதியின் (அக்கா) பாடல்கள் பல்வேறு உணர்வுகளை வெளிக்கொணர்ந்தவை. இந்திய சினிமா அடைந்த மாற்றங்களை பல தசம ஆண்டுகளாக சேர்ந்தே வளர்ந்து கவனித்தவர். படங்களைத் தாண்டி தேச வளர்ச்சியில் அவர் அக்கறை கொண்டிருந்தார். அவர் எப்போதுமே இந்தியாவை வலுவான, வளர்ந்த இந்தியாவாகப் பார்க்க விரும்பினார்'' என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என தொடர்ந்து தங்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மோடி நேரில் இறுதி அஞ்சலி: பிரபல பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், ''லதா தீதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த இன்னும் சிறிது நேரத்தில் மும்பை செல்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in