

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய இடங்களில் உள்ள அரசு பி.யூ. கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள் நேற்று ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப் போராட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸார் ஆதரவு தெரிவித் துள்ளனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா, “ஹிஜாப் அணிவது முஸ்லிம் மாணவிகளின் அடிப்படை உரிமை. ஹிஜாப் தடைக்கு பின்னணியில் பாஜக எம்எல்ஏக்கள் ரகுபதி பட், ஹலடி சீனிவாச ஷெட்டி ஆகியோர் இருக்கின்றனர்” என்றார்.
இந்தியர்களாக இருப்போம்
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறும்போது, “மாணவர்கள் கல்லூரிக்கு வருவது வழிபாடு நடத்த அல்ல.மத அடையாளங்களை வழிபாட்டு தலங்களுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஹிஜாப், காவித் துண்டு ஆகியவற்றை கல்லூரிக் குள் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒன்றுபட்ட மனோநிலைக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் பாரத மாதாவின் பிள்ளைகள் என்பதை உணர வேண்டும்” என்றார்.