

கரீம்நகர்: தெலங்கானாவில் 16 வயது சிறுவன் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் ஏற்றியதில் அங்கு அமர்ந்திருந்த 4 பெண்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் விபத்து ஏற்படுத்திய சிறுவன், அவனது 2 நண்பர்கள், கார் கொடுத்த தந்தை என 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம், கரீம்நகரில், 16 வயது சிறுவன் தனது 2 நண்பர்களுடன் (மூவரும் மைனர்கள்) தினமும் கார் ஓட்டப் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலையில் கமான் சென்டர் பகுதியில் வேகமாக சென்ற சிறுவனின் கார் நிலைதடுமாறி நடைபாதை மீது ஏறியது. பிரேக்குக்கு பதிலாக தவறுதலாக ஆக்சிலேட்டரை சிறுவன் மிதித்ததால் கார் திடீரென வேகம் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடைபாதை மீது கார் ஏறியதில் அங்கு குடிசை அமைத்து வசித்துக் கொண்டிருந்த 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு குழந்தை உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் கரீம்நகர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து கரீம் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் விபத்துக்குப் பிறகு அங்கிருந்து தப்பியோடிய 16 வயது சிறுவன், அவனது 2 நண்பர்கள், சிறுவனுக்கு கார் கொடுத்த தந்தை ராஜேந்திர பிரசாத் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதனிடையே தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.