

சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் அடுத்துள்ள புகழ்பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்தரதத்தின் சக்கரங்கள் பழுதாகின. அந்த சக்கரங்களை கழற்றி கோசாலை அருகே பாதுகாப்பாக வைத்திருந்தனர். மர்ம நபர்கள் சிலர் புதன்கிழமை நள்ளிரவு ரதத்தின் சக்கரங்களை எரித்துவிட்டுதப்பியோடிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சிலமாதங்களுக்கு முன்னர், அந்தர்வேதி பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலின் ரதத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனை தொடர்ந்து, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொண்ட பிட்ரகுண்டா பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் ரதத்தையும் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். பிரசித்தி பெற்ற விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயிலின் ரதத்தில் இருந்த 3 வெள்ளி சிங்கங்கள் திருடப்பட்டன.
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ராமதீர்த்தம் கோயிலில் மூலவர் ராமரின் தலை துண்டிக்கப்பட்டது. மேற்கு கோதாவரி மாவட்டம், சூர்யராவ் பாளையத்தில் உள்ள அம்மன் கோயிலின் முகப்பு கோபுர வாசல் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதை எதிர்த்து எதிர்க்கட்சியினரும், மக்களும் குரல் கொடுக்க தொடங்கியதும், இந்து கோயில்கள் மீதானதாக்குதல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது ரத சக்கரங்களை எரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.