தனி நபரின் மாண்பே முக்கியம்: கார் விவகாரத்தில் விவசாயிக்கு ஆதரவாகப் பேசிய ஆனந்த் மஹிந்திரா

தனி நபரின் மாண்பே முக்கியம்: கார் விவகாரத்தில் விவசாயிக்கு ஆதரவாகப் பேசிய ஆனந்த் மஹிந்திரா
Updated on
2 min read

விவசாயிக்கு கார் விற்பனை செய்ய மறுத்து அவரது உடையைச் சுட்டிக்காட்டி ஏளனமாகப் பேசியதாக மஹிந்திரா கார் ஷோரூம் ஊழியர்கள் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதன் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா விவசாயிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மஹிந்திரா ரைஸின் அடிப்படை நோக்கமே அத்தனை பங்குதாரர்களையும் எழுச்சி காண செய்ய வேண்டும் என்பதே. அதுமட்டுமல்லாது தனி நபரின் மாண்பை பாதுகாக்க வேண்டும் என்பது நாம் கொண்டுள்ள பண்பு. இதற்கு ஏதேனும் பங்கம் வருமென்றால் அதற்கு அதிக முக்கியத்தும் கொடுத்து உடனடியாக கவனம் செலுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிக்கு நேர்ந்தது என்ன? கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டம் ராமண‌பாளையாவைச் சேர்ந்த விவசாயி கெம்பே கவுடா (35). இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு துமக்கூருவில் உள்ள மஹிந்திரா வாகன ஷோ ரூமுக்கு சென்று சரக்கு வாகனத்தின் விலை உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் கெம்பே கவுடாவை தொடர்புகொண்ட ஷோ ரூம் ஊழியர், ‘வாகனத்தை எப்போது வாங்குவீர்கள்?' என கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘கரோனா நெருக்கடியால் பணப் பற்றாக்குறை இருக்கிறது. அடுத்த மாதம் வாங்க முயற்சிக்கிறேன்' என பதிலளித்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஷோரூமுக்கு சென்ற கெம்பே கவுடா, ‘‘வங்கிக் கடன் பெறுவதற்காக நீங்கள் கேட்ட ஆவணங்களைக் கொண்டு வந்துள்ளேன். எனக்கு இன்றே வாகனம் வேண்டும். கூடுதலாக பணம் செலவானாலும் பரவாயில்லை'' எனக் கூறியுள்ளார்.
அதற்கு ஷோ ரூம் ஊழியர், ‘‘உங்களைப் பார்த்தால் (அழுக்கான ஆடை அணிந்திருப்பதால்) 10 ரூபாய்கூட இல்லை போல தெரிகிறது. நீங்கள் வாகனம் வாங்க வரவில்லை. அதனை வேடிக்கைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்'' எனக் கூறி அவமானப்படுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த கெம்பே கவுடா, ‘‘ரூ.10 லட்சம்கொண்டு வருகிறேன். இன்றே வாகனத்தை டெலிவரி செய்ய வேண்டும்'' என‌ அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு ஷோ ரூம் ஊழியர், ‘‘சனி மற்றும் ஞாயிறு விடுமுறை. ஷோ ரூம் மூட 25 நிமிடங்கள் மட்டுமே நேரம் இருக்கிறது. அதற்குள் ரூ.10 லட்சம் கொண்டுவந்தால் உடனடியாக வாகனத்தை தருகிறேன்'' என பதிலளித்துள்ளார். இதையடுத்து கெம்பே கவுடா அங்கிருந்தவாறு தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.10 லட்சத்தை திரட்டினார்.

அடுத்த 25 நிமிடங்களில் கெம்பே கவுடா ரூ.10 லட்சத்தை ஷோ ரூம் ஊழியரிடம் கொடுத்து, ‘‘நீங்கள் கூறியவாறு ரூ.10 லட்சம் கொடுத்து விட்டேன். இப்போதே வாகனத்தை டெலிவரி செய்யுங்கள்'' என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தஷோ ரூம் ஊழியர், ‘‘வார இறுதிநாள்என்பதால் இன்று சிரமம். திங்கள்கிழமை கட்டாயம் வாகனத்தை டெலிவரி தருகிறேன்''எனக் கூறியுள்ளார்.

இதை ஏற்காத அவர், தன்னை அவமானப்படுத்தியதைக் கண்டித்து ஷோ ரூம் வாசலில் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், தனது ஆடையை வைத்துஷோரூம் ஊழியர்கள் அவமானப்படுத்தியதாக புகார் அளித்தார். போலீஸார்தலையிட்டதன் பேரில் ஷோ ரூம் ஊழியர்கள் கெம்பே கவுடாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், தனது நிறுவன ஊழியரின் செய்கையைக் கண்டித்து ட்வீட் செய்துள்ள ஆனந்த் மஹிந்திரா, விசாரணை நடைபெறுவதாகவும், முன் களத்தில் உள்ள ஊழியர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் விதம் குறித்து விரிவான பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in