கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

கரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
Updated on
1 min read

கரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இதனை மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் திங்கள்கிழமை 16.49 பரிசோதனைகள் செய்யப்பட்டது. நாட்டின் வாராந்திர பாசிடிவிட்டி 15% என்றளவில் உள்ளது. திங்களன்று பாசிடிவிட்டி விகிதம் 14.43 என்றளவில் இருந்தது. ஒமைக்ரான் வைரஸ், கவலை கொள்ளத்தக்க வகையறாவைச் சேர்ந்ததாக உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. இதனால், பரிசோதனைகள் தான் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அடித்தளம். தரவுகள் சரியாக இல்லாவிட்டால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமம்.

ஐசிஎம்ஆர் இணையதளத்தில் நிறைய மாநிலங்களில் கரோனா பரிசோதனைகள் குறைந்துள்ளது தெரியவருகிறது. எனவே, ஒமைக்ரான் தடுப்பை துல்லியமாக அணுக வேண்டுமென்றால் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். ஹாட்ஸ்பாட்டுகளை அறிந்து, நுண்ணளவு கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்கினால், தொற்றுப் பரவலைத் தடுக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 76 லட்சத்து 18 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பு 8,891 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைவிட 8.3% அதிகம்.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 17 லட்சத்து 36 ஆயிரத்து 628 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 310 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 86 ஆயிரத்து 761ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் இதுவரை 3 கோடியே 53 லட்சத்து 94 ஆயிரத்து 882 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை 158.04 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 14.43% என்றளவில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in