1 கோடி பேர் பங்கேற்கும் மெகா சூரிய நமஸ்கார் யோகா: நாளை நடத்த ஏற்பாடு

1 கோடி பேர் பங்கேற்கும் மெகா சூரிய நமஸ்கார் யோகா: நாளை நடத்த ஏற்பாடு

Published on

புதுடெல்லி: மகர சங்கராந்தி தினமான நாளை ஒரு கோடிக்கும் அதிகமானோர் சூரிய நமஸ்காரம் செய்யவுள்ளனர்.

சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் பகுதியாக 2022 ஜனவரி 14 அன்று உலகளாவிய சூரிய நமஸ்கார நிகழ்வுக்கு ஆயுஷ் அமைச்சகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 75 லட்சம் என்ற இலக்கிற்கு மாறாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

இணையம் வழியாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால், கோவிட்-19 அதிகரிக்கும் தற்போதைய சூழலில் மகர சங்கராந்தி அன்று சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் பொருத்தமானது என்றார். “சூரிய நமஸ்காரம் உடல் திறனையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்குகிறது என்பது நிறுவப்பட்ட உண்மையாகும். எனவே கரோனோவை ஒழிக்க முடியும்.

இந்த நிகழ்ச்சியில் 75 லட்சம் பேர் பங்கேற்க நாங்கள் இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால் பதிவையும், ஏற்பாடுகளையும் காணும்போது இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும் என்று நான் நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி இந்த நிகழ்ச்சி ஆயுஷ் அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது ” என்று அவர் கூறினார்.

இணையம் வழியிலான கூட்டத்தில் ஆயுஷ் இணையமைச்சர் டாக்டர் முஞ்சப்பராமகேந்திரபாய், ஆயுஷ் செயலர் வைத்ய ராஜேஷ் கொட்டேசா ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் முன்னணியில் உள்ள யோகா பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் இந்த உலகளாவிய நிகழ்ச்சியில் பங்கேற்கும். முக்கியப் பிரமுகர்கள், விளையாட்டு ஆளுமைகள், வீடியோ செய்திகள் மூலம் சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in