மகனைப் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளரை தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர் அஜய் மிஸ்ரா: வைரலாகும் வீடியோ

மகனைப் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளரை தரக்குறைவாக விமர்சித்த அமைச்சர் அஜய் மிஸ்ரா: வைரலாகும் வீடியோ

Published on

லக்கிம்பூர்: மகனைப் பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளரை அமைச்சர் அஜய் மிஸ்ரா தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் பத்திரிகையாளர் ஒருவர் லக்கிம்பூர் சம்பவ விசாரணைக் குழு அறிக்கையைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்புகிறார். அதற்கு அமைச்சர், "இதுபோன்ற முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள். நீங்கள் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவரா? திருடர்களே" என்று ஆவேசமாகப் பேசினார். மேலும் அந்த செய்தியாளரின் மைக்கையும் பறிக்க முயற்சி செய்தார். இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

லக்கிம்பூர் கேரியில் ஆக்சிஜன் கருவியை துவக்கிவைத்த போது இந்தச் சம்பவம் நடந்ததுள்ளது.

முன்னதாக இன்று காலை லக்கிம்பூர் கேரி சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது முன்பே திட்டமிடப்பட்ட சதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இன்று மக்களவையில் ராகுல் காந்தி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும். ஆனால் பிரதமர் மோடி அதை விரும்பவில்லை. அரசாங்கம் எப்படி மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற நிர்பந்திக்கப்பட்டதோ, அதேபோல் அமைச்சரையும் நீக்கும் என்று கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in