

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் போலீஸார் சென்ற வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயுதப்படை காவலர்கள் இருவர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.
பாதுகாப்புப் படையினரின் குடியிருப்புப் பகுதியான சேவான் பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. இரண்டு தீவிரவாதிகள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதி பாதுகாப்புப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கண்டம்:
இத்தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி அலுவலக ட்விட்டர் பக்கத்தில், ஜம்மு, காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி முழு விவரமும் கோரியுள்ளார். இத்தாக்குதலில் வீரமரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோரும் இத்தாக்குதலுக்கு கண்டனமும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்ரீநகர் சம்பவம் வருத்தமளிக்கிறது. காஷ்மீரில் இயல்பு நிலை இருப்பதாக அரசாங்கம் போலியாக பிரச்சாரம் செய்வது இந்த சம்பவம் மூலம் அம்பலமாகியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பந்திப்பூரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்னொரு தாக்குதல் நடந்திருக்கிறது.