விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்புக்கு மோடி அரசின் தோல்விகளே காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ்  எம்.பி. ராகுல் காந்தி | படம் ஏஎன்ஐ
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, வேளாண் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு வேராக இருப்பது மத்தியில் ஆளும் மோடி அரசின் அகங்காரம், தோல்விகள்தான் காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரானப் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். வேளாண் பயிர்களுக்கு உரிய குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்ய சட்டஅங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார்.

சமையல் கியாஸ் விைல உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இளைஞர்களிடையே நிலவும் வேலையின்மை, பணவீக்கம் ஆகியவை குறித்தும் மத்திய அரசை கடந்த சில மாதங்களாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். இது தொடர்பாக மக்களவையிலும் ராகுல் காந்தி பேசினார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சி்த்து, ட்விட்டரி்ல் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் “ பணவீக்கம், வேலையின்மை, வேளாண் சிக்கல்கள், சீனாவின்ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு வேராக இருப்பது அனைத்தும் ஒன்றுதான். மோடி அரசின் தோல்விகள், அகங்காரம், நண்பர்கள் மீதான அன்புதான் காரணம்.

அநீதிக்கு எதிராக அனைவரும் சேர்ந்து ஒருசேர குரல் எழுப்புவோம்.காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நாங்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறோம். மக்களின் எண்ணங்களை, குரல்களை அந்த அரசுகள் காது கொடுத்து கேட்கின்றன. ஆனால் மோடி அரசு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in