

இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 12 பேரும் மன்னிப்பு கேட்டால் அவர்கள் மீதான இடைநீக்கம் உத்தரவை திரும்ப பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறினார்.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வெர்மா, ஆர். போரா, ராஜாமணி பட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை கட்சியைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பி உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் டெல்லியில் நடந்த பாஜக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எம்.பி.க்கள் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறித்து விரிவாக விளக்கி உள்ளோம். நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை மக்கள் பார்த்துள்ளனர். அவர்கள் மன்னிப்பு கேட்டால் கூட, அவர்கள் மீதான இடைநீக்கம் உத்தரவை திரும்ப பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.