விவசாயிகள் மரணம் குறித்து ஆவணமே இல்லை என்று கூறுவதா? மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்

விவசாயிகள் மரணம் குறித்து ஆவணமே இல்லை என்று கூறுவதா? மத்திய அரசுக்கு ராகுல் கண்டனம்
Updated on
1 min read

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் விவசாயிகள் உயிர் நீத்ததாக எந்த ஆவணமும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மத்திய அரசோ, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது விவசாயிகள் உயிரிழந்ததற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை என்ரு கூறி வருகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளிலேயே காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி விவசாயிகள் மரணம் தொடர்பான கேள்வியை எழுப்பினார். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்நிலையில் தான் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதேபோல் பல்வேறு விவசாய சங்கங்களும் வேளாண் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ள ராகுல் காந்தி, "வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகப் பேசிய பிரதமர் மோடியே தான் ஒரு பெரிய தவறு இழைத்துவிட்டதாகக் கூறி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கூறினார்.

அவர் செய்த தவறால் 700 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால், இப்போது விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக எதுவும் தெரியாது என்று மத்திய அரசு கூறுவது நாகரிகம் அல்ல. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

பஞ்சாப் அரசு, 403 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் கொடுத்துள்ளது. அதேபோல் எங்களிடம் போராட்டத்தில் உயிரிழந்த வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 152 விவசாயிகளின் பட்டியல் உள்ளது. மீதமுள்ளவர்களையும் எளிதில் கண்டறிந்துவிடலாம்.

ஆனால், மத்திய அரசோ எந்த ஆவணமும் இல்லை எனக் கூறுகிறது. உயிரிழந்த விவசாயிகளுக்கு இரங்கல் கூட மத்திய அரசு தெரிவிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in