Last Updated : 25 Mar, 2016 09:10 AM

 

Published : 25 Mar 2016 09:10 AM
Last Updated : 25 Mar 2016 09:10 AM

மேற்குவங்க தேர்தல்: மம்தாவுக்கு எதிராக... ஒற்றுமை இல்லாத இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி- தனித்தனியாக வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதால் குழப்பம்

ஒரே மூச்சில் 294 தொகுதிகளுக்கும் வேட்பாளர் களை அறிவித்துவிட்டு கம்பீரமாக களத்தில் நிற்கிறார் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸுக்கு தலைமை ஏற்றுள்ள மம்தா பானர்ஜி. ஆனால், எதிர்தரப்பில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிச கட்சி(ஆர்எஸ்பி) உள்ளிட்டவை இடதுசாரிகள் அணி என்ற பெயரில் கூட்டணி சேர்ந்துள்ளன. இதில் காங்கிரஸ் இணைந்துள்ளதுதான் மேற்குவங்க மாநில மக்களுக்கு கிடைத்த அதிர்ச்சி.

கடந்த முறை இதே காங்கிரஸ் கட்சி மம்தாவுடன் கூட்டணி வைத்து இடதுசாரிகளின் 34 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவியது. இன்று மம்தாவுக்கு எதிராக இடதுசாரிகளுடன் கூட்டணி வைக்க வேண்டிய தர்மசங்கடத்தை சந்தித்துள்ளது. இந்த கூட்டணி ஒருபுறம் அமைந்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை அவர்களது தொகுதி ஒதுக்கீடே காட்டிக் கொடுத்துள்ளது.

இடதுசாரிகள் முதல்கட்டமாக 116 தொகுதிக ளுக்கும் இரண்டாம் கட்டமாக 84 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சி தனியாக 95 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் ஆர்எஸ்பி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். குறைந்தது 100 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

படம்: கொல்கத்தாவில் ஆள், அரவமின்றி மூடிக் கிடக்கும் கம்யூனிஸ்ட் கிளை அலுவலகம்.

திரிணமூல்-இடதுசாரிகள்-காங்கிரஸ் என ஒரு சில தொகுதிகளில் மும்முனைப் போட்டி ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று இடதுசாரி கூட்டணியின் முக்கிய தலைவர்கள் அறிவித்துவிட்டனர். இதன்மூலம் எதிரணியில் ஒற்றுமை இல்லை என்பது இன்னும் பகிரங்கமாகவே வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் கிளை அலுவலகங்கள் ஆங்காங்கே ஆள், அரவமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.

வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலைவிட கூடுதல் பலத்துடன் களமிறங்கி உள்ளார் மம்தா பானர்ஜி. அவரது கட்சி அலுவலகங்கள் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றன. வேட்பாளர்கள் சிலர் மீது சுமத்தப்படும் சில குற்றச்சாட்டுகள், ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் அவரது கட்சியினர் சிலர் பணம் வாங்குவது போல் வெளியான வீடியோ ஆதாரங்கள் ஆகியவை திரிணமூல் கட்சிக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த புகார்களை மம்தா எளிதாக சமாளித்துள்ளதுடன், இதேபோன்று ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் எதிர்க்கட்சியினர் என்ன மாதிரியான வாழ்க்கையை திரைமறைவில் வாழ்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டப் போகிறேன் என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளதன் மூலம் எதிர்க்கட்சியினர் மிரண்டு போயுள்ளனர்.

அரசியலில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜிதான் வெற்றி பெறுவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த முறை வென்றதைவிட கொஞ்சம் கூடுதல் இடங்களைப் பிடிக்கும். காங்கிரஸ் கட்சியும் சில இடங்கள் கூடுதலாக பெறும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நேர்மையற்ற நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டதால், அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. நேர்மையற்றவர்கள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர். அதனால், மம்தாவே மீண்டும் வெற்றி பெறுவார். திரிணமூல் கட்சியின் மீதும் சில புகார்கள் உள்ளன. இந்த புகார்கள் மிகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், அவை அவரது வெற்றி விகிதத்தை குறைக்குமே தவிர, வெற்றியை பாதிக்காது. நான் தமிழகத்துக்கு ஒருமுறை வந்துள்ளேன். ஆனால், தமிழக அரசியல் நிலவரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்றார்.

“எனக்கு தேர்தல் குறித்து கொல்கத்தாவின் ஹஜ்ரா மால் பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ள 82 வயதான மூத்த குடிமகன் ஹரிபாதகுண்டு ‘தி இந்து’விடம் கூறியபோது,

கறிக்கடைகளில் அலைமோதிய கூட்டம்

வடமாநிலங்களில் பிரபலமான ஹோலி பண்டிகை மேற்கு வங்கத்தில் ‘தோல்யத்ரா’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கறிக்கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. வரிசையில் நின்று சண்டை போட்டு கறி வாங்கும் அளவுக்கு கூட்டம் இருந்தது.

கறி வாங்க வந்த அப்பு சவுத்ரி என்பவர் ‘தி இந்து’விடம் கூறியபோது, ‘ஹோலி பண்டிகை என்பதால், கறிக்கடையில் கூட்டம் அலைமோதுகிறது. எல்லோரும் ஒரே நாளில் கறி வாங்க வந்ததால் இவ்வளவு கூட்டம். வரிசையில் நின்று வாங்க வேண்டியிருக்கிறது. மற்ற நாட்களில் இந்த அளவுக்கு கூட்டம் இருக்காது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x