மாநிலங்களவை - கோப்புப் படம்
மாநிலங்களவை - கோப்புப் படம்

12 எம்.பி.க்கள் இடைநீக்கம்; மன்னிப்பு கேட்டால் மறுபரிசீலனை செய்ய தயார்: பிரகலாத் ஜோஷி

Published on

12 எம்.பி.க்களும் சபாநாயகரிடமும், சபையிடமும் தங்களின் தவறான நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டால், அவர்களின் இடைநீக்க உத்தரவை திறந்த மனதுடன் பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வந்தன.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேஜையின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். ஆகஸ்ட் 11-ம் தேதி மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மறுநாள் அவையில் கண்ணீர் விட்டார்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வெர்மா, ஆர். போரா, ராஜாமணி பட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை கட்சியைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

இதனிடையே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளாதாவது:

‘‘குளிர்காலக் கூட்டத்தொடரில் முக்கியமான மசோதாக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனை அனுமதிக்க... ஆரோக்கியமான விவாதத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

சபையின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், மாண்பை காக்கவுமே 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த 12 எம்.பி.க்களும் சபாநாயகரிடமும், சபையிடமும் தங்களின் தவறான நடத்தைக்காக மன்னிப்புக் கேட்டால், அவர்களின் இடைநீக்க உத்தரவை திறந்த மனதுடன் பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது.

ஒவ்வொரு பிரச்சினையையும் விதிகளின்படி விவாதிக்கவும், ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கவும் அரசு தயாராக உள்ளது. பல முக்கிய மசோதாக்கள் சபையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அவற்றை அனுமதிக்குமாறு அனைத்துக் கட்சிகளையும் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதாக்கள் மீது ஆரோக்கியமான விவாதம் தேவை.

இவ்வாறு ஜோஷி கூறினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in