

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகே உள்ள வனஸ்தலிபுரத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் நக்கா நாதமுனி கவுட் (32).
இக்கோயிலுக்கு அடிக்கடி வரும் பட்டியல் இனப் பெண்ணான பிரேமலதா (27) என்பவருடன் நாதமுனிக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து, அவரை நாதமுனி அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த கோயில் அறங்காவலர் குழு தலைவர் லட்சுமைய்யா, உறுப்பினர் சத்யநாராயணா, கோயில் மேலாளர் சிரஞ்சீவி ஆகியோர் நாதமுனி கவுடின் வேலையை பறித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் நேற்றுவனஸ்தலிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனது மனைவியை ஜாதி பெயரை கூறி மிகவும் இழிவாகவும் பேசியதாக புகாரில் கூறியுள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் வனஸ்தலிபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் கோயில் நிர்வாகிகளை தேடி வருகின்றனர்.