Published : 23 Nov 2021 03:06 AM
Last Updated : 23 Nov 2021 03:06 AM

ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகர் சட்டம் வாபஸ்: புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஜெகன் அறிவிப்பு

அமராவதியில் 700 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் பெண்கள், விவசாயிகள் நேற்று 3 தலைநகர் சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்ததும், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அமராவதி

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கும் சட்டத்தை நேற்று அமராவதி பேரவையில் முதல்வர் ஜெகன் அரசு திரும்ப பெறுவதாக அறிவித்தது.

விஜயவாடா - குண்டூர் இடையே33 ஆயிரம் ஏக்கரில் அமராவதி தலைநகரை அமைக்க வேண்டுமென்பது முன்னாள் முதல்வர்சந்திரபாபு நாயுடுவின் கனவு. இதற்கு அமராவதி மக்கள் சம்மதித்து விளைநிலங் களை தலைநகருக் காக வழங்கினர். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன் மோகன் ரெட்டி முதன் முறையாக முதல்வரானார். இவர் முதல்வரானதும், அமராவதி மட்டுமே தலைநகரல்ல. கர்னூலில் உயர் நீதிமன்றம், விசாகப் பட்டினத்தில் தலைமை செயலகம், அமராவதியில் சட்டப்பேரவை என ஆந்திராவுக்கு 3 தலைநகரம் அமைக்கப்படுமென அறிவித்தார்.இதற்கான மசோதாவும் பெரும் அமளிக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் நிலம் கொடுத்த அமராவதி விவசாயிகள் கடந்த 700 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பேரவை கூட்டம் தொடங்கிய நிலையில், நேற்று மதியம் ஆந்திர நிதி அமைச்சர் ராஜேந்திர நாத், 3 தலைநகர சட்டத்தை அரசு வாபஸ் பெறுகிறது என முன் மொழிந்தார்.

முதல்வர் ஜெகன் மோகன் பேசுகையில், ‘‘தேவையில்லாமல் 50 ஆயிரம் ஏக்கரில் தலைநகரை கடந்த தெலுங்கு தேசம் அரசு உருவாக்க முடிவு செய்தது. இதனால் செலவு தான் அதிகம். எனவே, நாங்கள் 3 தலைநகர்களை அமைக்க முடிவு செய்தோம். இதனால் சிலர் நீதி மன்றங்களை நாடினர். இவர்களுக்கு அந்த சட்டம் குறித்து புரிய வைப்போம். இதன் காரணமாக நாங்கள் 3 தலைநகர் சட்டத்தை வாபஸ் பெறுகிறோம். புதிய சட்ட மசோதாவுடன் மீண்டும் உங்கள் முன்வருவோம்’’ என்றார். இதற்கிடையில், பாத யாத்திரை சென்று கொண்டிருந்த அமராவதிக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தகவல் அறிந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x