Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் திரிபுராவில் ஏழைகளுக்கு வீடு முதல் தவணையாக ரூ.700 கோடி: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

திரிபுராவில் ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தில் 1.47 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.700 கோடி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் இலக்குடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் முதல் தவணையை திரிபுராவின் 1.47 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி 1.47 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல் தவணையாக ரூ.700 கோடி நிதி வழங்கப்பட்டது.

பின்னர், காணொலிக் காட்சி மூலம் பயனாளிகளிடையே பிரதமர் மோடி பேசியதாவது:

மத்தியில் ஏற்கெனவே ஆட்சி யில் இருந்த அரசுகள் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தவில்லை. பாஜக தலைமையிலான அரசு திரிபுரா உட்பட ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வருகிறது. அனைவருக்கும் வீடு என்ற லட்சியத்தை அடைய மத்திய அரசு செயல்படுகிறது. இதன் மூலம் திரிபுராவில் நகர்ப்புற ஏழைகள் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளாக மத்தி யில் பாஜக தலைமையிலான அரசு புதிய சிந்தனையுடன் புதிய அணுகுமுறையுடன் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது. மாநிலத்தில் உள்ள பாஜக அரசும் மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது. மாநில அரசின் கலாச்சாரம் மற்றும் பழைய நடைமுறைகளை மாற்றியுள்ள முதல்வர் பிப்லப் தேப் மற்றும் மாநில அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசால் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x